Saturday, May 18, 2013

எதிர்நீச்சல்

படம் எனக்கு பிடித்திருந்தது.  தன் பெயரால் தன் மனிதன் எவ்வளவு இழப்புகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகிறான் என்பதை சுவைபட சொல்லியிருக்கிறார்கள்.  அதிலிருந்து மீள அவன் செய்யும் போராட்டம் என்ன?  இறுதியில் என்ன படிப்பினை பெறுகிறான் என்பதும் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய முக்கியமான செய்தி.

தமிழ்நாட்டில் நாட்டார் வழக்கு தெய்வங்களின் பெயர், தாத்தா, பாட்டி பெயர்கள் என பல வகைகளில் குழந்தைகளுக்கு முன்பெல்லாம் பெயர் வைத்தார்கள்.  'நாகரிக' சமுதாயத்தில் அந்த பெயர்கள் எல்லாம், எப்படி 'காலாவதி' ஆகிப்போயின என்பது ஒரு நீண்ட விவாதத்திற்கு உரியது.

'அண்ணாமலை' என பெயர் கொண்ட அண்ணணின் நண்பன், அண்ணாமலை படம் வந்த பிறகு, அவன் அந்த பெயருக்கு 'பெருமை' கொண்டான். ரஜினிகாந்த் காப்பாற்றிவிட்டார். :)

இப்பொழுதும் 90%க்கும் மேலாக யாரும் தமிழ் பெயர் வைப்பதில்லை.  இந்த படத்தில் நாயகன் பெயரை (ஹரிஸ்) போலவே பலரும் வைக்கிறார்கள்.  ஜாதகத்தை கொண்டு முன்னெழுத்தை ஜாதககாரர்கள் சொல்கிறார்கள். அந்த எழுத்துக்களில் பெயர்கள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், தமிழர்கள் தனிக்கவனம் எடுத்து தவிர்க்கிறார்கள்.

நேற்று கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் அகமுடையார் குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு 'பிரணவ ஜெயின்' என்று வைத்திருப்பதாக சொன்னார்கள். பெற்றோர்கள் சிங்கப்பூரில் சில ஆண்டுகளாக வசிக்கிறார்கள். இதைவிட 'நாகரிக' ச்முதாயத்தில் வாழ்கிறார்கள் அல்லவா! :)

என் நண்பர்கள் சிலர் தங்கள் பெயரினால் விவரம் தெரியாத வரை சிரமப்பட்டு இருக்கிறார்கள்.  பெயர் என்பது பெயர் மட்டுமில்லை.  அதில் நமது அடையாளம், மண்ணின் மணம், குல வரலாறு இருப்பதை புரிந்துகொண்ட பிறகு, தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவந்துவிட்டார்கள்.

பெயர் சம்பந்தமாகவே படம் முழுவதும் சுவாரசியமாக நகர்ந்து இருக்கலாம்.  இயக்குநருக்கு நம்பிக்கை இல்லாததால், மாரத்தான் என நகர்ந்துவிட்டார்.  மாரத்தானில் ஜெயித்து, வெற்றிப் பேட்டியில், 'சிவகாமியின் மைந்தன் குஞ்சிதபாதமாக தான் உலகத்திற்கு அறியபப்படவேண்டும். அது தான் தந்தையில்லாமல் பல சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்த தன் தாய்க்கு பெருமை' என சொல்வது அருமை. படம் முழுவதும் விவாதித்த ஒரு விசயத்தை அந்த ஒரு நிமிடத்தில் சடாரென கடந்து போயிருந்ததை தவித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

மற்றபடி, நடிகர்களின் தேர்வு, நடிப்பு, ஒளிப்பதிவு, பாடல், நடனம் என படத்தின் வேகத்திற்கு உதவியிருக்கிறது.

படம் ஒரு விவாதப்புள்ளியை துவங்கி வைத்திருக்கிறது. நாம் தாம் அதை விரிவாக்கி நம்மை சுற்றியுள்ளவர்களிடம் எடுத்துச்செல்லவேண்டும்.