Wednesday, May 1, 2013

Le Grand voyage - 2004 - மகத்தான பயணம்

பயணங்கள் நமக்கு நிறைய கற்றுத்தரும் ஆசானாக இருக்கின்றன. மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் ஏதாவது ஒரு ஊருக்கு பயணமாக சென்று வந்தால் என்னிடமிருந்து கொஞ்சம் மன அழுக்குகள் கறைந்து போவதை பார்த்திருக்கிறேன். பெருநகரம் உடம்பில் ஏற்றிய படபடப்பை கொஞ்சம் உதறிவிட்டு வந்திருக்கிறேன் என்பது நன்றாக உணர்ந்திருக்கிறேன்.

தொழிற்முறை பயணம், இன்பச் சுற்றுலா, ஆன்மீக பயணம் என பயணங்களில் பலவகையானவை உண்டு. இந்த பயணம் பிரான்சிலிருந்து மெக்கா நோக்கி பயணம் பற்றிய படம். அருமையான படம்.

****

கதை எனப் பார்த்தால்...

பிரான்சில் வாழும் ஒரு முஸ்லீம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெரியவருக்கு மெக்கா பயணம் மேற்கொள்வது அவரது நீண்ட கால ஆசை.  பள்ளி இறுதியில் படிக்கும் தன் இளைய மகனை அழைத்துக்கொண்டு தரை வழி மார்க்கமாக தனது நீண்ட பயணத்தை காரில் துவங்குகிறார்.

பல மனிதர்களை வழியில் சந்திக்கிறார்கள். உடல் நல குறைபாடு, தூதரக தொல்லைகள், எல்லாவற்றையும் எதிர்கொண்டு இறுதியில் மெக்காவை அடைகிறார்கள். உடல் நலக்குறைவினால், அங்கு இறந்துவிடுகிறார்.  அப்பா குறித்த நினைவுகளுடன் பிரான்சுக்கு திரும்புகிறான்.

****

ஐந்துமுறை தொழுகும் அப்பா. பிரான்சில் பண்பாட்டில் வளர்ந்த எதிலும் பெரிய பிடிப்பு இல்லாத இளைஞன்.  மெக்கா செல்லவேண்டும் என்றால் விமானத்தில் செல்லலாமே! (ஏன் என் உயிரை எடுக்கிறீர்கள்?) என்கிறான் பையன்.  ஆன்மீக பயணம் என்பது நடை தான் சிறந்தது. அதற்கு வாய்ப்பில்லாத பொழுது காரில் பயணிக்கிறோம் என்கிறார்.

பிரான்சிலிருந்து மெக்கா வரை 3000 கி.மீட்டர்கள்.  இடையில் பல முக்கிய நகரங்களை கடக்கிறார்கள்.  அந்த இடங்களை சுற்றிப்பார்க்கலாம் என ஆசைப்படுகிறான் பையன்.  "நாம் ஒன்றும் சுற்றுலா வரவில்லை" என மறுத்துவிடுகிறார்.

காதலியோடு செல்போன் பேசுகிறான்  என கடுப்பாகி அவன் தூங்குகிற பொழுது குப்பையில் எறிந்துவிடுகிறார்.  அடுத்த நாள் அதை அறிந்து டென்சனாகிவிடுகிறான் பையன்.

ஒருமுறை அப்பாவுக்கும் மகனுக்கும் பெரிய வாக்குவாதமாகி பையனை அடித்துவிடுகிறார். நான் ஊருக்கு கிளம்புகிறேன். நீங்கள் தனியாக போய் சிரமப்படுங்கள்! என கத்துகிறான்.  சரி காரை விற்று நீ ஊருக்கு போ! நான் பயணத்தை தொடர்கிறேன் என்கிறார்.  பிறகு சமாதானம் அடைகிறார்கள்.

அப்பா மகன் என தலைமுறை இடைவெளியை பேசுகிற படம் இது! 

பிரான்சில் வளர்ந்த பையன், இவரும் பல காலம் பிரான்சில் வாழ்ந்தவர் தானே!  பிரான்ஸ் பண்பாடு அவரை கொஞ்சம் கூட மாற்றவில்லையா என்ன?  அரபு நாடுகளில் வாழும் அப்பாவை போலவே இறுக்கமாக வாழ்கிறார். கொஞ்சம் நெருடலாக இருந்தது.

இந்தியாவில் ஒரு அப்பாவும் பிள்ளையும் இப்படி பயணித்தால் கூட பயண அனுபவங்கள் கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இப்படி தான் அனுபவம் ஏற்படும்.

பிள்ளைகள் என்பவர்கள் தன் வழியே வந்தவர்கள் அவ்வளவு தான்.  தன்னுடைய சொத்து போல பிள்ளைகளையும் பாத்தியப்பட்டவர்கள் போல நடந்துகொள்கிறார்கள்.

அப்பாக்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை.  அனுபவம் இருப்பதாலேயே தாங்கள் சிந்திப்பது, செயல்படுவது சரி என நினைக்கிறார்கள்.  பிள்ளைகள் படித்தவர்கள். அவர்களின் அறிவையும் நம் அனுபவத்தையும்  சேர்த்து செய்யலாம் என்பதாக யோசிக்க மாட்டேன் என்கிறார்கள்.

படத்தில் நடித்த பாத்திரங்கள் மிக குறைவு. அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பார்க்கவேண்டிய படம்.

இந்த படத்தைப் பார்க்க தூண்டியது எஸ். இராமகிருஷ்ணனின் கீழே உள்ள விமர்சனம் தான்.  விரிவாக எழுதியுள்ளார். அவசியம் படியுங்கள்.

மகத்தான பயணம்

No comments: