Friday, October 28, 2011

காதல் காணாமல் போகும்!

சமீப காலமாக வசந்த் தொலைக்காட்சியில் இந்திய நேரப்படி இரவு 11 மணி முதல் 11.30 வரை வாரத்தில் எல்லா நாட்களிலும் பாலியல் மருத்துவர் (Sexologist) காமராஜ் மக்களின் பாலியல் குறித்தான சந்தேகங்களுக்கு பதிலும், இடையிடையே சில தலைப்புகளில் தொடர் உரையும் வழங்கி வருகிறார். (எவ்வளவு பெரிய வாக்கியம்!)

சில நாட்களில் நேரடி ஒளிபரப்பாகவும், சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிபரப்பாகவும் வெளியிடுகிறார்கள்.

அதில் சில குறிப்புகள் சுவாரசியமானவை. அவசியமாக பகிர்ந்து கொள்ள தக்கவை!

****

தினமும் யாராவது ஒருத்தராவது "சுய இன்பம் செய்வது தவறா?" என்ற கேள்வி தொடர்ந்து கேட்கிறார்கள். மருத்துவரும் "இல்லை! இல்லை!" என பல காரணங்கள் சொல்லி, மறுத்து வருகிறார்.

இந்த கேள்வி பாலியல் அறிவில் துவக்கப்புள்ளியான கேள்வி. கல்லூரி மாணவர் யாராவது இந்த கேள்வியை எழுப்பினால் கூட பரவாயில்லை. பல்வேறு வயதினை சேர்ந்தவர்களும் இந்த கேள்வியை கேட்கிறார்கள். இப்படி பாலியலில் எல்.கே.ஜி. அளவிலேயே 40, 50 வயது வரை இருந்தால் என்ன செய்வது? நமது பாடத்திட்டத்திலேயே பாலியல் கல்வி அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் இந்த ஆரம்ப கால சந்தேகங்கள் வலியுறுத்துகின்றன.

மக்களின் அறியாமையால் சுய இன்பம் செய்தால், வரும் கோளாறுகள் என பயமுறுத்தி, பல போலி மருத்துவர்கள் தமிழ்நாட்டில் கல்லா கட்டுகிறார்கள். அவர்களுடைய அனைவரும் வாழ்விலும் மருத்துவர் மண்ணை அள்ளிப்போடுகிறார். :)

****

ஆரோக்கியமான பாலியல் குறித்த அக்கறையில், தொடர்ச்சியாக மருத்துவர் வீட்டில் ஆண்கள் தங்கள் துணைவியார்களை சமமாக நடத்துங்கள் என வலியுறுத்தி வருகிறார்.

தொடர்ச்சியாக ஆண்கள் பாலியல் உறவில் தன் உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, பெண்களில் உச்சநிலை அடைவது குறித்து கவலைப்படவில்லையென்றால், நாளடைவில் துணைவியாருக்கு உடலுறவிலேயே நாட்டம் இல்லாமல் போய்விடும் என்கிறார்.

இதையே வேறு வேறு விசயங்களில், வேறு வேறு வழிகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். ஆண்கள் பெண்களை பாலியல் உறவின் தேவைக்கு மட்டுமே சமமாக நடத்திவிடுவார்களா என்ன?

இங்கு நிலவுகிற பிற்போக்கு கலாச்சாரமான முதலாளியத்தின் நுகர்வு கலாச்சாரமும், பெண்ணை சமமாக நினைக்க விடாத, இந்து பார்ப்பனிய கலாச்சாரமும் இந்தியாவில் நிலவும் வரை பெண்ணை சமமாக நடத்துவது சாத்தியமே இல்லை. அதற்கு சமீபத்திய இரண்டு உதாரணங்கள்.

கடந்த வாரம் ஒருவர், மருத்துவரிடம் கேள்வி கேட்கும் பொழுது இப்படி ஆரம்பித்தார்.

"என் மனைவிக்கு குழந்தையில்லை" என!

"எங்களுக்கு குழந்தை இல்லை என சொல்லுங்கள்" என மருத்துவர் திருத்தினார்.

சமீபத்தில் நீயா நானாவில் மாமியார்கள் VS மருமகள்கள் விவாதம் நடந்தது. தன் மகன், மருமகளை அன்றாட வாழ்வில் சில விசயங்களில் துணைவியருக்கு உதவிய பொழுது, அதற்கு அந்த அம்மாக்கள் மனம் பெரிதும் கலங்கினார்கள். கண்ணீர் விட்டார்கள்.

****

சில சுவாரசிய கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

கடந்த வாரம் நெல்லையிலிருந்து நடுத்தர வயது பெண்மணி ஒரு கேள்வி கேட்டார்.

"திருமணத்திற்கு முன்பு காதலருடன் இருந்த உறவில் இனிமை இருந்தது. இப்பொழுது திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. அவருடன் இருந்த பாலியல் இனிமை, என் கணவரிடம் இல்லையே! ஏன் டாக்டர்?" என்றார்.

****
சில குறிப்பிட்ட தலைப்புகளிலும் உரையாற்றுகிறார் என சொன்னேன் அல்லவா!

கணவன், மனைவி உறவில் ஏன் பல சிக்கல்கள் வருகிறது? என விளக்கும் பொழுது, சிரித்துக்கொண்டே

"தெய்வீக காதலர்களுக்கு திருமணம் நடத்தி வையுங்கள். வெகு சீக்கிரத்தில் காதல் காணமல் போய்விடும்!" என சில ஆய்வுகளை மேற்கோள்காட்டி விரிவாக பேசினார்.

****

இந்த நிகழ்ச்சியின் வர்த்தக ரீதியான பலன்கள் தாண்டி, இந்நிகழ்ச்சிகளை பார்க்க பரிந்துரைப்பதற்கான காரணம் மருத்துவர் நிதானமானவராக, எளிமையாக புரியும்படி பேசுகிறவராக இருப்பது தான்!

மருத்துவத்துறை சேவைத்துறை என்பது மறைந்து போய், நன்றாக கல்லாக்கட்டும் துறையாக மாறி பல வருடங்களாயிற்று. கடந்த காலங்களில், மருத்துவருக்கும் நோயாளிக்குமான ஒரு நல்வுறவு இருந்தது. பல தமிழ்படங்களை பார்த்தால், அந்த உறவை புரிந்துகொள்ளலாம். இப்பொழுது நிலைமை மாறி, நோயாளிகளிடம் மருத்துவர்கள் பேசவே மாட்டேன் என்கிறார்கள். பேசினால், அடுத்து இரண்டு நோயாளிகளை பார்க்கமுடியாமல் போய்விடும் என பயப்படுகிறார்கள். இந்த நிலைமையில், மக்களின் சந்தேகங்களுக்கு மருத்துவர் பதிலளிப்பது வரலாற்று முக்கிய நிகழ்வு என்பதாக கொள்ளலாம்.

இந்த பதிவு குறித்தும், நிகழ்ச்சி குறித்தும் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

****

4 comments:

Anonymous said...

நன்று.

Anonymous said...

really its a good program to knw many things
hats off Dr.kamaraj and you

சேக்காளி said...

நானும் நேரம் கிடைக்கும் போது பார்த்திருக்கிறேன்.நல்ல நிகழ்ச்சி.உங்கள் பதிவை படித்த பின்பு வேறொரு கோணமும் புலப்பட்டிருக்கிறது. அதேபோல் மக்கள் தொலைக்காட்சியில் வரும் "ஹலோ தோழியே" நிகழ்ச்சியையும் பாருங்கள்.தவிர்க்க படக் கூடிய நிறைய தவறுகள் சுட்டிக்காட்டப் படுகிறது.

குமரன் said...

அனானியாக வந்து கருத்து சொன்னவர்களுக்கு நன்றி. சேக்காளி அவர்களுக்கும் நன்றி. இனி, ஹலோ தோழி நிகழ்ச்சியையும் கவனிக்கிறேன்.