Sunday, October 30, 2011

நன்றி சொல்லவேண்டிய தருணமிது!


எங்கள் ஊரில் டூரிங் டாக்கிஸில் 'இன்றே இப்படம் கடைசி" என சுவரொட்டி ஒட்டுவது நினைவுக்கு வருகிறது. இந்திய நேரப்படி நாளைக் காலை 9.30 மணியோடு நட்சத்திர வாரம் முடிவடைகிறது. நன்றி சொல்ல வேண்டிய தருணமிது!

இந்த ஒரு வாரம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. அந்த அனுபவத்தையும், நன்றிகளையும் நிச்சயமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். நிச்சயம் உங்களுக்கு பயன்படும்.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தமிழ்மணத்தின் பொறுப்பாளர் மின்னஞ்சலில் நீங்கள் "தமிழ்மணம் நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என தெரிவித்த பொழுது, சந்தோசத்தை விட, பதட்டம் தான் அதிகம் வந்தது. காரணம் மாதத்திற்கு மூன்றோ அல்லது நான்கோ ஆற, அமர பதிவுகள் எழுதுகிற ஆள் நான். திடீரென ஒருவாரம் - 7 பதிவுகள் எழுதவேண்டும் என்று சொன்னால் பதட்டம் வருவது இயல்பு தானே!

இருப்பினும், அந்த பயத்தை வெளிக்காட்டாமல் "இன்னும் இரண்டு வாரம் இருப்பதால், எளிதாக எழுதிவிடலாம்" என தமிழ்மண பொறுப்பாளரிடம் கெத்தாக மின்னஞ்சல் அனுப்பினேன்.

அடுத்து ஒரு பிரச்சனை. தீபாவளி நேரத்தில் என்னை தேர்ந்தெடுத்து எழுத சொன்னது! தீபாவளிக்கு மூன்று நாள் ஊருக்கு செல்லவேண்டும் என மூன்று மாததிற்கு முன்பே திட்டம் இருந்ததால், அலுவலகத்திலும் வேலை நெருக்கடி இருந்தது. தமிழ்மணம் நிர்வாகியிடம், அதற்கு அடுத்த வாரம் எழுதுகிறேனே என கேட்கலாமா! என்று கூட யோசனை வந்தது. 'ஏதோ நெருக்கடியில் தான் 'உப்புமா' போல, உன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், இப்பொழுது நீ தேதி மாற்றிக்கேட்டால், கொடுத்த வாய்ப்பை மறுபரிசீலனை செய்யப்போகிறார்கள்' என ஒரு வானத்தில் அசரிரீ கேட்டது. ஏன் ரிஸ்க்? என முடிவெடுத்து, கேட்டுக்கொண்டபடியே எழுதிவிடலாம் என முடிவு செய்து, களத்தில் குதித்துவிட்டேன்.

அடுத்த பிரச்சனை. 7 கட்டுரைகள். நாள் நெருங்க, நெருங்க கட்டுரைகள் எழுதி முடித்தபாடில்லை. பதட்டம் தான் கூடிக்கொண்டே வந்தது. நட்சத்திர வாரம் துவங்கிய பொழுது, அறிமுக பதிவான "நான்" தவிர்த்து, "குழந்தைகள் - மறுபக்கம்" , "மனிதர்கள் - அன்பழகன்" என இரண்டு கட்டுரைகள் மட்டும் தான் கையில் இருந்தது. ஒரு வழியாக அலுவலகத்தில் தட்டச்சு செய்து, எனக்கு நானே மின்னஞ்சல் அனுப்பி இல்லாத கடவுள் மீது, பாரத்தை போட்டு, ரயிலேறிவிட்டேன்.

ஊரில் தீபாவளியன்று எல்லா இணைய மையங்களும் விடுமுறை என்பதால், எழுதிய பதிவை தட்டச்சு செய்து வலையேற்றம் செய்யமுடியவில்லை. அதனால், நண்பனிடம் சொல்லி, பழைய பதிவான "பொன்னியின் செல்வனின் இறுதிபாக (நொந்த) கிளைக் கதை" பதிவை மீள்பதிவிட செய்தேன்.

ஒவ்வொரு நாள் பதிவிற்கும், முதல் நாள் தேர்வுக்கு படிக்கும் மாணவன் போல, ஒவ்வொரு கட்டுரையாக எழுதி பதிவிட்டேன். ஒருவழியாக, தமிழ்மணத்திற்கு கொடுத்த ஒருவாரம் - 7 பதிவுகள் எழுதவேண்டும் என்ற வாக்கை காப்பாற்றிய நிம்மதியில், இன்றிரவு நிம்மதியாக உறங்க போகிறேன்.

மற்றபடி கட்டுரைகளின் தரம் என பார்த்தால், நீங்கள் தான் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் படிப்பில், செயல்பாடுகளில் நான் சராசரி மாணவன் நான். இந்த தேர்விலும் தேறிவிட்டேன் என்றே சொல்வேன்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் 3000 ஹிட்ஸ்கள் அதிகமாயிருக்கிறது. பின் தொடர்கிறவர்களாக சில நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். என் எழுத்தை பொறுமையாக வாசித்தவர்களுக்கும், நட்சத்திர வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும், படித்து, பின்னூட்டத்தில் கருத்தும் தெரிவித்து சிறப்பாக உற்சாகப்படுத்தியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக, பெண் பதிவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மேலும், தமிழ்மணம் நட்சத்திரமாவதற்கு என சில தகுதிகளை சில நாட்களுக்கு முன்பாக தமிழ்மணம் எழுதியிருந்தார்கள். அந்த தகுதிகளில் சிலவற்றில் நிச்சயம் தேறவே மாட்டேன். இருப்பினும், இவன் தேறுவான் என என்னையும் நம்பி, தேர்ந்தெடுத்து, ரிஸ்க் எடுத்த தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கும், அவ்வப்பொழுது சின்ன சின்ன சந்தேகங்கள் கேட்ட பொழுது, உடனுக்குடன் பதிலளித்த தள நிர்வாகிகளில் ஒருவரான திரு. சங்கரபாண்டியன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மற்றபடி, மொக்கை, கும்மி, ஜல்லி என இல்லாமல், சமூக அக்கறையுடன் எழுதுகிற பதிவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நாளை நட்சத்திரமாக தோன்ற போகும் புதிய பதிவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

தோழமையுடன்,

நொந்தகுமாரன்.

5 comments:

Mahi_Granny said...

எல்லா பதிவுகளையும் வாசிக்க முடிந்தது . நன்றாகவே இருதது. பாராட்டையும் வாங்கிக் கொள்ளுங்கள்

Mahi_Granny said...

எல்லா பதிவுகளையும் வாசிக்க முடிந்தது . நன்றாகவே இருதது. பாராட்டையும் வாங்கிக் கொள்ளுங்கள்

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் குமரன். இவ்வளவு நெருக்கடியிலும் உங்கள் கடமையை அழகுற நிறைவேற்றி இருக்கிறீர்கள்.

குமரன் said...

மகி அவர்களுக்கு,

தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி.

குமரன் said...

வல்லி அம்மா அவர்களுக்கு,

தமிழ்மணம் நட்சத்திர வாரம் முழுவதும், கருத்துக்கள் சொல்லி, ஊக்கப்படுத்தினீர்கள். மனமார்ந்த‌ நன்றிகள்.