Saturday, May 18, 2013

இனியெல்லாம் சுகமே!

நேற்று ஒரு டிவிடி கடையில் பாடல் டிவிடி வாங்கலாம் என தேடியபொழுது, கமல், ரஜினி பாடல்கள் என 75 படங்களுக்கு மேலான படங்களின் பாடல்கள் அடங்கிய டிவிடி பார்த்தேன். அந்த கால கேசட் நினைவு வந்தது. பகுதிக்கு 6 பாட்ல்கள் என இரண்டு பக்கமும் 12 பாடல்கள் தான் பதியமுடியும். இந்த ஒரு டிவிடி 25 கேசட்டுகளுக்கு சமம் என மனம் கணக்கிட்டது. இன்றைய தலைமுறைக்கு பல பொருட்கள் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கின்றன.

அண்ணனின் நண்பன் ஒருவன் இளையராஜாவின் ரசிகன் அவன். அவனுடைய வேலை நேரம் தவிர மீதி நேரத்தை இளையராஜாவுடன் தான் கழித்தான். 70களில், 80களில் இளையராஜாவின் பாடல்களை கடை கடையாய் ஏறி சேகரித்து, கேசட்டில் பதிந்து, இரவில் மொட்டைமாடியில் இரவு 2 மணிவரை கேட்டுக்கொண்டிருப்பான். கல்யாண பரிசாக கூட இளையராஜா பாடல்களை தான் பரிசாக அளிப்பான். 

அண்ணனோடு சேர்ந்து தூங்கிய காலங்களில் இளையராஜாவின் பாடல்கள் தான் தாலாட்டு. அண்ணனின் நண்பன் திரும்ப திரும்ப கேட்டு, சில பாடல்கள் இன்றைக்கு வரைக்கும் கூட மனப்பாடம் தான்.

உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...
இனியெல்லாம் சுகமே...

பக்கத்து வீட்டு அக்கா ஒரு கேசட்டிலே தனக்கு பிடித்த ஒரே பாடலை மட்டும் முழுவதும் பதிந்து கேட்டுக்கொண்டே இருப்பார். இது என்ன லூசா என அன்றைக்கு தோன்றியது. காதல் பித்தில் இருந்திருக்கிறாள் என இப்பொழுது புரிகிறது.

அப்பொழுது தான் வீட்டில் அதிக கேசட் வைத்திருப்பவர்களுக்கு இருக்கிற கெத் தனி தான். அதை கடனாக கேட்டால், அவர்கள் பண்ணுகிற பிகு இருக்கிறதே! தாங்காது. கடனாக வாங்கி, அந்த கேசட்டுக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதே பாடல் தான் வேண்டும். அதே வரிசையில் வேண்டும் என அடம்பிடிப்பார்கள். :)

கேசட்டுகளை பதிந்து நிறைய பணத்தை வீணாக்கிறான் என அண்ணனை திட்டிக்கொண்டே இருப்பார் அம்மா. இப்பொழுது டேப்ரிக்கார்டடை தேடினாலும் பார்க்கமுடியாது. ஆனால், அண்ணன் வீட்டில் சில கேசட்டுகளை தன் நினைவுகளுக்காக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.

1 comment:

கோகுல் said...

நானும் சில கேசட்டுகளை வைத்திருக்கிறேன்.நல்ல நினைவலைகள்