Sunday, October 30, 2011

தென்மேற்கு பருவக்காற்று! ஒரு திரைப்பார்வை!


வேலாயுதம், ஏழாம் அறிவு என வணிகத்திற்காக எடுக்ககூடிய படங்கள் ஒருபக்கம் வரட்டும்! கதையம்சம் கொண்ட படங்களும் வரட்டும்! என்கிறவர்களுக்கு ஒரு செய்தி : வணிக ரீதியான படங்கள் அனைத்து திரையரங்களையும், மக்களின் ரசனையையும் ஆக்ரமித்து, நல்ல படங்கள் வருவதற்கான வழியை அடைத்துவிடுகின்றன என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

1996ல் பாரதிராஜாவின் 'அந்திமந்தாரை' வந்த பொழுது, மதுரையின் முக்கிய வீதி ஒன்றில் படம் குறித்து பாரதிராஜா பேசும் பொழுது, "நான் 25 வருடங்களாக திரையுலகில் இருக்கிறேன். நான் சில தரமற்ற (குப்பை!) படங்களையும் தந்திருக்கிறேன். அதற்கு பிராயச்சித்தமாக இந்த படத்தை தருகிறேன். இதை மக்கள் வரவேற்று, வெற்றிபெற செய்யவேண்டும். இது மக்களின் கடமை" என்று பேசினார். படம் தோல்வியுற்றது. ஆனால் தேசியவிருது வென்றது.

ஒருமுறை என் மூத்த அண்ணன், பாரதிராஜாவின் பேச்சை சிலாகித்து குறிப்பிட்ட பொழுது, எனக்கோ அபத்தமாகப்பட்டது. வருடத்திற்கு 100 படங்கள் வரை வெளிவருகின்றன. 99 படங்கள் குப்பையாக மக்கள் மண்டையில் கொட்டிவிட்டு, ஒரே ஒரு நல்ல படம் தருவார்களாம். அதை ஜெயிக்கவைக்க வேண்டியது மக்களின் கடமையாம்!

கிட்டத்தட்ட 149 படங்கள் 2010ம் ஆண்டில் வெளிவந்தன. அதில் 85%க்கும் மேலாக வணிகத்தை மட்டும் குறி வைத்து எடுக்கப்பட்ட படங்கள். நல்ல படங்களில் தென்மேற்கு பருவக்காற்று படமும் ஒன்று! சிறந்தபடம், சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகை என மூன்று தேசிய விருதுகளை பெற்றுத்தந்தது.

இந்த நல்ல படத்தை வெளியிடுவதற்காக பட்ட சிரமங்களை இயக்குநர் சீனு ராமசாமியிடம் கேட்டுப்பாருங்கள். வெடித்து பேசுவார். பண்டிகை காலத்தில் படம் வெளியிட வேண்டும் என வரிசை கட்டி பல படங்கள் காத்திருக்கும். அதனால், அதற்கு முந்தைய மூன்று வாரங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கும். இந்த இடைவெளியில் வந்த படம் தென்மேற்கு பருவக்காற்று படம். என்ன கொடுமை சரவணா இது?

டிசம்பர் இறுதி வாரத்தில், இந்த படம் வெளிவந்த பொழுது, அந்த படத்தின் விளம்பர சுவரொட்டியில் ஒரு செய்தி சொல்லியிருந்தார்கள். அந்த செய்தி மிக முக்கியமானது. இந்த வருடத்தில் ஆனந்தவிகடனின் விமர்சனத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றபடம் இது!'. ஆனந்தவிகடனில் முக்கியமான எல்லா படங்களுக்கும் விமர்சனம் எழுதிவிடுகிறார்கள். ஆக, 2010ல் வெளிவந்த தமிழ்படங்களின் லட்சணம் இப்பொழுது நன்றாக புரியும்!

*****
இனி படம் என்ன கதையை சொல்கிறது என்பதை கொஞ்சம் பார்க்கலாம்.

இந்த சுட்டியை சொடுக்கினால், முழு கதையும் இந்த பதிவில் கிடைக்கிறது. படித்துவிட்டு வாருங்கள். நாம் அதை தாண்டி பேசலாம்!

****

படத்தில் கணவனை இழந்த வீராயி, தன்னுடைய உறுதியால், உழைப்பில், வைராக்கியத்துடனும், சுயமரியாதையுடனும் தன் பையனை வளர்க்கிறார். எங்கள் மண்ணில் பல தாய்களை என் வாழ்வில் பார்த்து வளர்ந்திருக்கிறேன். சுயமரியாதையுடன் வாழவேண்டுமென்றால் அதற்கு கடும் உழைப்பு அவசியம் என்பதை இவர்களை பார்த்து கற்றிருக்கிறேன்.

****

படம் முழுவதும் வீராயி சிரிக்கவேமாட்டார். எங்கள் வீட்டிலும், பொறுப்பில்லாத அப்பா என்பதால், அம்மா தான் எல்லாமும்! எங்கள் அம்மாவும் சிரிக்கவே மாட்டார். எப்பொழுதாவது அபூர்வமாய் சிரித்தால், அம்மா நிறைய அழகாய் இருப்பார்.

****

படத்தின் இறுதிக்காட்சியில் மகனை கொல்ல தேடிவரும், மகனின் காதலியின் அண்ணணை துணிச்சலுடன் எதிர்கொள்வார் வீராயி. பல பெரிய கதாநாயகர்கள் கோபத்தில், கண் சிவந்து, 100 எதிரிகளை வீழ்த்தும் வீரம் எல்லாம் வீராயி அம்மாவின் துணிவுக்கு முன்னால் டம்மி பீசு!

****

அப்படி எதிர்கொண்டு கத்தியால் குத்திவிட்டு ஓடிவிடுவான். உடனிருக்கும் ஒரு ஊமைப்பையன் அலறி துடிப்பான். அவனை கண்களாலும், வார்த்தையாலும் அதட்டி, வயிற்றிலிருந்து வெளியே கொட்டிய குடலை அப்படியே அள்ளி, திரும்பவும் எடுத்து உள்ளே போட்டு, , துண்டைக் கட்டி, அவனை செய்தி சொல்ல அனுப்பி, நடந்துபோய், பேருந்தைப் பிடித்து மருத்துவமனையில் போய் சேர்வார்! என்ன ஒரு அசாத்தியம்! என்ன ஒரு உறுதி!

மதுரை என்றால் ரவுடிசம், குத்து, வெட்டு என ரணகளப்படுத்துகிறார்கள். வீராயி போன்ற மனுசிகளை தேடித்தேடி பதிவு செய்வது தான் மக்கள் இலக்கியம். நல்ல திரைப்படம்.

****

வேலாயுதம் ராஜாவும், ஏழாம் அறிவு முருகதாசும் இப்பொழுது அடுத்த படத்தில் பரபரப்பாக இருக்கிறார்கள். இப்படியொரு நல்ல படத்தை இயக்கிய சீனு ராமசாமி தன்னுடைய அடுத்தபடம் 'நீர்ப்பறவை' என அறிவித்தார். ஒரு வருடம் ஆகிவிட்டது. சத்தமே இல்லை. இதுதான் தமிழ் சினிமாவின் எதார்த்தம்.

****

இங்கு உள்ள சுட்டியில், படம் எழுத்து போடும் பொழுது, பல வீராயிகளை நிழற்படங்களாக காட்டியிருப்பார் இயக்குநர். அருமை! நிச்சயம் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=PgGDlB6N7Gw

****

3 comments:

Mahi_Granny said...

கடந்த வாரம் தான் இந்த படத்தை பார்க்க கிடைத்தது. எனவே இந்த விமர்சனமும் ஒப்பீடும் மிகச் சரி. வாழ்த்துக்கள் .

Katz said...

உங்கள் விமர்சனம் படித்ததில் மகிழ்ச்சி. எனக்கு பிடித்த படம். நாமும் இந்த படங்களை பார்த்து விமர்சனம் எழுதி ஆதரவு தராமல் போய் விடுகிறோம். வெட்டியாய் வேலாயுதம் ஏழாம் அறிவு என்று பேசி கொண்டிருக்கிறோம். நன்றி.

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

பல தடவை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் பட முடிவில், கண்கள் கசிவதை தடுக்க முடிவதில்லை!