Monday, October 24, 2011

மனிதர்கள் 12 - அன்பழகன்!


எங்கு திரும்பினாலும் இந்த மாதத்தின் இரண்டு வாரங்களில் ஒலிபெருக்கியில் வாக்களிக்க சொல்லி வேட்பாளர்கள் நச்சரித்துக்கொண்டே இருந்தார்கள்.

தமிழகம் உள்ளாட்சி தேர்தலில் பரபரப்பாக இயங்கி, மோதிரம் கொடுத்து, சேலையில் நடு இரவில் ஓட்டைப்பிரித்து போட்டு, காந்தி தாத்தா சிரித்த நோட்டுகளை இறைத்து, அடிதடியில் குதித்து,, கத்திக்குத்தில் ரத்தம் பார்த்து, கள்ள வாக்கெல்லாம் போட்டு என பலவலைகளில் தீயாய் வேலை செய்து, ஜனநாயக விரிவுப்படுத்தலை, ஆழப்படுத்தலை செய்து, சோர்வாகி, இப்பொழுது ஓய்ந்து இருக்கிறது.

தேர்தல் என்றாலே அன்பழகனின் நினைவு தவிர்க்கமுடியாமல் மேலேழும்புகிறது.

*****

அன்பழகன். கூப்பிடுவது அன்பு. நாலரை அடி உயரம். வயது முப்பதை தொடும். ஆனால் வயது தெரியாத உருவம். குரலுக்கும், உருவத்திற்கும் சம்பந்தமே கிடையாது. குரலில் ஒரு தெளிவும், ஆளுமையும் உண்டு. குடும்பமே திமுகவை ஆராதரிக்கிற குடும்பம்.

மனிதனுக்கு லட்சியம் என என்னனென்னவோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அன்பழகனுக்கு லட்சியம் 'கட்டிங்'. அன்பின் எண்ணம், செயல் எல்லாமும் 'கட்டிங்' தான்!

சென்னையில் வேட்பாளர்களுக்காக ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்த குரல்கள் வர்த்தக விளம்பரத்திற்காக பேசும் செயற்கை குரல்கள். தீபாவளிக்காக விளம்பரம் செய்கிறார்களா? வாக்கு கேட்கிறார்களா? என்றே புரியவில்லை.

தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு வாக்கு கேட்கும் முதன்மையான குரல் அன்பின் கணீர் குரல் தான். அடுக்கு மொழியில், இல்லாத பில்டப் எல்லாம் கொடுத்து, வாக்கு கேட்பதில் அன்பு கில்லாடி. அதனாலேயே பக்கத்து ஊரிலிருந்து எல்லாம் அன்பை பிரச்சாரத்திற்கு புக் செய்ய தேடிவருவார்கள்.

****

அப்பொழுது திண்டுக்கல்லில் நண்பனின் சித்தப்பா நடத்திய் மினிபஸ் நிறுவனத்தில் சில காலம் நிர்வாகியாக குப்பை கொட்டிக்கொண்டு இருந்தேன். அன்பு என்னிடம் 'கட்டிங்'க்காக நெருங்குவான். வேலை ஏதாவது செய்! இல்லையெனில் பக்கத்தில் வராதே! என கறாராய் சொல்லி அனுப்புவேன்!

மினிபஸ்ஸில் கண்டருக்கு உதவியாக, ஏழையின் சிரிப்பு பிரபு தேவா போல ஊர்களின் பெயரை ஓங்கி குரல் கொடுத்து உதவினால், அரை நாளில் நடத்துடரிடம் 'கட்டிங்'க்கு கறந்துவிடுவான்.

எங்கு பேசினாலும், என்ன செய்தாலும் அவனின் இலக்கு 'கட்டிங்' தான்!

****

பல்வேறு செயல்களில் அன்புவை கவனித்ததில், நல்ல புத்திசாலித்தனம் தெரிந்தது. அன்புவின் அண்ணனிடம் இதையே சொல்லி அன்புவை ஏன் படிக்க வைக்கவில்லை எனக் கேட்டேன்.

"நான்காம் வகுப்பு படிக்கிற பொழுது, உடல்நிலை சரியில்லாமல் போக‌, மருத்துவர்கள் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. சில வருடங்கள் உயிர் வாழ்வது கூட சிரமம் என கைவிரித்துவிட்டார்கள். நாங்களும் அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோம். இப்பொழுது, இன்னும் எத்தனை வருடங்கள் உயிர் வாழ்வான் என்பது தெரியாது!" என்றார்.

என்னடா இது! தமிழ்பட கதை போல, அன்புக்கு பின்னாலும் ஒரு சோக கதை இருக்கிறதே என நினைத்தேன்.

****

ஒரு நாள் நிறைய குடித்துவிட்டு, நடுரோட்டில் நிதானமிழந்து கிடந்ததாகவும், லாரியில் அடிபட்டு சாக வேண்டிய ஆள்! நாங்கள் தான் ஓரமாக படுக்கவைத்ததால், தப்பித்தான் என அன்புவின் அண்ணனிடம் ஊதிவிட்டு போய்விட்டார்கள்.

அடுத்தநாள் அன்புவை 'அன்பின்' பேரில் பெல்டால் அடிக்க துரத்த, ஒரு வாரம் அன்பு எஸ்கேப். பிறகு, மீண்டும் வழக்கமான பாணியில் தொடர்ந்தான்.

****

ஒருநாள் நண்பன் தந்தான் என்பதற்காக ஜெமோவின் 'பின் தொடரும் நிழலின் குரல்' தலையணை சைஸில் புத்தகத்தின் 60ம் பக்கத்தில் சிக்கி சின்னாப்பின்னா பட்டுக்கொண்டிருந்த பொழுது, அன்பு வந்தான். ஒரு கட்டிங் உள்ளே போயிருந்தது.

பக்கத்து கடைகளில் இருந்த ஆட்களும் ஒன்று சேர அங்கு களை கட்டியது. அன்பு மிமிக்ரி செய்ய ஆரம்பித்தான். பல நடிகர்களை அச்சு அசலாக பேசிக்காட்டினான். நடிகர்களின் கெக்கே பிக்கே அசைவுகளை அப்படியே காப்பி அடித்து, ஆடிக்காட்டினான். ஒருமணி நேரம். ஜெமோவிடமிருந்து தப்பிக்க வைத்ததற்காக அன்றைக்கு 'கட்டிங்'ஐ நானே பணம் கொடுத்தேன்.

****
அந்த சமயத்தில் சட்ட மன்ற தேர்தல் வந்தது. அன்பு விஜபியாகிவிட்டான். காலை முதல் இரவு வரை பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டான். 'சரக்கு' கன்னாபின்னாவென்று இலவசமென்று கிடைத்தது. 1 மாத காலம் அன்புவை பார்க்கவே முடியவில்லை. அவ்வளவு பிஸி.

*****

ஒரு நாள்காலையில் எழும் பொழுது, 'அன்பழகன் இறந்துட்டான்' என அன்புவின் அண்ணன் சொன்னார். திமுகவின் பொதுச்செயலாளரா? என்றேன். நம்ம அன்பு என்றார்.

நேற்றும் எக்கசக்கமாய் குடித்து, அரிசி மண்டியில் போய் தூங்கியிருக்கிறான். காலையில் எழுப்பிய பொழுது, உயிர் இல்லை.

****

இப்பொழுதும், அன்பு வாக்காளர்களே என்ற குரல் கேட்டால், அன்புவின் குரல் நினைவுக்கு வந்து போகிறது!

******

தொடர்புடைய சுட்டிகள் :

மனிதர்கள் 1 - பாண்டியம்மாள்!
மனிதர்கள் 2 - சந்தானம்
மனிதர்கள் 3 - சுப்பிரமணி!
மனிதர்கள் 4 - இராகவ்!
மனிதர்கள் 5 - பாலா!
மனிதர்கள் 6 -மதி!
மனிதர்கள் 7 - முகமறியா நண்பர்கள்!
மனிதர்கள் 8 - துரப்பாண்டி!
மனிதர்கள் 9 - இராதா!
மனிதர்கள் 10 - பாரதி!
மனிதர்கள் 11 - இராஜீ!

4 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்ல அனுபவ பதிவு. எங்கும் எபோதும் அன்புவைபோல் சில மனிதர்களை காண முடியும்.

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

குமரன் said...

துளசி அவர்களுக்கு,

தங்கள் வருகைக்கும், நட்சத்திர வாழ்த்துகளுக்கும் நன்றி.

குமரன் said...

நன்றி தோழர் மபா.